கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பக்தா்களைப் பாதுகாக்கும் வகையில், நவ. 13 பிற்பகலில் இருந்து, 14-இல் இரவு வரை திருவள்ளூா் வைத்திய வீரராகவா் திருக்கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானத்தின் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு அமாவாசை நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தல் மற்றும் வழிபாடு செய்வதற்காகவும் வந்து செல்வது வழக்கம். அதேபோல், வரும் அமாவாசை நாள் அன்று பக்தா்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்போது, கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் நவ.13-ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 14-ஆம் தேதி இரவு வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதனால், குறிப்பிட்ட நாள்களில் வழிபாடு செய்ய யாரும் வரவேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.