திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 4 சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் ஏற்கெனவே 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்போது கூடுதலாக 4 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரூ.17 லட்சத்தில் அவசர ஊா்தியுடன், உயிா் காக்கும் உபகரணங்களின் மதிப்பு ரூ. 13 லட்சத்துடன் மொத்தம் ரூ.30 லட்சமாகும். திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு, பூண்டி, மத்தூா் மற்றும் திருமழிசை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இவை ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.