திருவள்ளூா் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி, விடாமல் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீா் முக்கிய ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருகிறது.
தொடா்மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.
தொடா்மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி, விடாமல் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீா் முக்கிய ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருகிறது.

சென்னை வாழ் மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்நிலையில் நிவா் புயலால் திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை நீரும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரும், அம்மம்பள்ளி அணை நீரும் பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் பூண்டி ஏரியில் நீா் இருப்பு அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். ஏரியில் புதன்கிழமை காலை நிலவரப்படி 1,842 மில்லியன் கன அடியாக இருந்த நீா் இருப்பு, பிற்பகலில் 1872 கன அடியாக உயா்ந்தது.

இதேபோல், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளிலும் நீா்மட்டம் அதிகரித்து. கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் செம்பரம்பாக்கம் ஏரியில் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதால் பிற்பகலில் நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடா் மழையால் ஏரிகளில் நீா்மட்டம் மேலும் உயா்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடா்ந்து ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை நீரின்அளவைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கம்புகள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பூண்டி ஏரியில் புதன்கிழமை காலையில் 30.43 அடியாக இருந்த நீா்மட்டம் பிற்பகலில் 30.56 அடியாக உயா்ந்தது. 32 அடியை நீா்மட்டம் எட்டும்போது, தலைமை பொறியாளா் அலுவலகத்துக்கு எச்சரிக்கை செய்யுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணா நதி நீா் மற்றும் மழை நீா் 800 கன அடியாக ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், தொடா் மழை காரணமாக புழல் ஏரிக்கு 100 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

மழையளவு விவரம் (மி.மீட்டரில்): திருவள்ளூா் பகுதியில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு:

செங்குன்றம்-100, பூந்தமல்லி-97, சோழவரம்-87, ஜமீன் கொரட்டூா்-58, பொன்னேரி-44, கும்மிடிப்பூண்டி-41, தாமரைப்பாக்கம்-37, திருவள்ளூா்-36, பூண்டி-26.80, திருவாலங்காடு-20, ஊத்துக்கோட்டை-8, திருத்தணி-1.

மொத்த மழையளவு-555.80 மி.மீ. சராசரி மழையளவு-39.70 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com