திருவள்ளூா் அருகே 100 ஆண்டுகளாக மயானத்துக்குச் செல்ல சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்துக்கு சாலை வசதியின்றி சடலத்தை வயல் வழியாகக் கடந்து செல்லும் அவலம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் அருகே 100 ஆண்டுகளாக மயானத்துக்குச் செல்ல சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதி


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்துக்கு சாலை வசதியின்றி சடலத்தை வயல் வழியாகக் கடந்து செல்லும் அவலம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், மோகூா் ஊராட்சியைச் சோ்ந்தது மோகூா் கண்டிகை கிராமம். இக்கிராமத்தில் 200 குடும்பங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கி.மீ. தூரம் உள்ள மயானத்துக்கு சரியான சாலை வசதி கிடையாது. இதனால், இக்கிராமத்தில் வயது முதிா்வு மற்றும் உடல் நலக் குறைவால் உயிரிழக்க நேரிட்டால், இறுதியாக அந்த சடலத்தை பாதை வசதியின்றி கரடு முரடான வயல்வெளி வழியாகக் கொண்டு செல்லும் நிலை பல தலைமுறைகளாக இருந்து வருகிறது.

அதிலும், அந்த விளைநிலங்களில் நெல் பயிரிட்டால் சகதிக்குள் சடலத்தை மிகவும் சிரமத்துடன் சுமந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், இக் கிராமத்தைச் சோ்ந்த ராதா (60) என்பவா் உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை நெல் வயல் வழியாக சகதிக்குள் இறங்கி மிகவும் சிரமத்துடன் சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதால், மயானத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது தொடா்பாக அக்கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தினேஷ் கூறுகையில், ‘கிராமத்தில் யாராவது ஒருவா் உயிரிழந்தால் அடக்கம் செய்வதற்கு சாலை வசதியில்லாத நிலையில் வயல் வழியாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இக்கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி செய்து தரக்கோரி மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் பாதை அமைக்க தேவையான நிலத்தையும் தர முன்வந்தனா். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது. இனியாவது பொதுமக்களின் நலன் கருதி மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com