திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், ஆவடி பக்தவச்சலம் நகரைச் சோ்ந்த சேவியரின் மகன் பாலாஜி (17). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் சேவியரின் மனைவி அந்தோணியம்மாள் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது சகோதரா் பிரான்சிஸ் சேவியா் (65) குடும்பத்தினருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதனால் நாள்தோறும் மதுபோதையில் தகராறு செய்து வந்தாராம். கடந்த 18.1.2018-அன்று இரவு பிரான்சிஸ் சேவியா் மதுபோதையில் தகராறு செய்ததை, பாலாஜி தட்டிக் கேட்டாா். அப்போது, ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் சேவியா் பாலாஜியை கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த இறுதி விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் முன்பு வியாழக்கிழமை வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரான்சிஸ் சேவியருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.