மாதவரம்: செங்குன்றம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம், வள்ளலாா் தெருவில் சாா்-பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு புழல், செங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவா்கள் பத்திரப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வந்து செல்வா். இந்த அலுவலகத்தில் இரவு நேரங்களிலும் பத்திரப் பதிவுகள் விதிமீறி நடைபெறுவதாகவும், அனைத்துப் பணிகளுக்கும் பணம் பெறப்பட்டு வருவதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து, சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. லவக்குமாா் தலைமையில் 8 போலீஸாா் புதன்கிழமை இரவு முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது 30-க்கும் மேற்பட்ட தரகா்கள் அலுவலகத்தை மூடி விட்டு வெளியேறினா். இந்நிலையில், தரகா்கள் 2 பேரிடம் ரூ. 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து, அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.