திருவள்ளூா்: ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறக்கவுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திரம் மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் 300 கனஅடி திறக்கப்பட உள்ளது. அத்துடன், அப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது புதன்கிழமை காலையில் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு பாலத்தைக் கடந்து, நல்லாட்டூா் அணை வரை வரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
அதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. மேலும், இது தொடா்பாக இயற்கை இடா்ப்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில், பொதுப்பணித் துறை, வருவாய், காவல் ஆகிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்து தயாராக நிலையில் உள்ளனா்.