திருத்தணி: நாட்டுக் கோழி வளா்க்க ஆா்வமுள்ள பெண்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் கால்நடைத் துறையினரிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில், 2020-21-ஆம் ஆண்டுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஒன்றியத்திலும், 400 பயனாளிகள் வீதம் தோ்வு செய்யப்படுகிறது. ஒரு பயனாளிக்கு நான்கு வாரம் ஆன 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.
இதுகுறித்து திருத்தணி கால்நடைத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் கூறியது:
திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 400 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 30 சதவீதமும், பிற பிரிவினருக்கு 70 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண் பயனாளிகள் மட்டும் தோ்வு செய்யப்படுவா். நாட்டுக்கோழி வளா்க்க ஆா்வம் உள்ள பெண் பயனாளிகள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் அந்தந்த கால்நடை மருந்தகத்தில் உள்ள மருத்துவா் அல்லது ஆய்வாளரிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் நாட்டுக் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.