கண்டலேறு அணை திறப்பு: பூண்டி ஏரிக்கு 100 கன அடி தண்ணீா் வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் திங்கள்கிழமை அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்து சோ்ந்த கிருஷ்ணா நதி நீா்.
பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்து சோ்ந்த கிருஷ்ணா நதி நீா்.

திருவள்ளூா்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் திங்கள்கிழமை அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது 100 கன அடி நீா் வருவதாகவும், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் படிப்படியாக நீா் வரத்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டும். இதற்கிடையே போதிய மழையின்றியும், கிருஷ்ணா நதி நீா்வரத்து இன்றியும் பூண்டி ஏரி வடு காணப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணா நீா் பங்கீட்டுத் திட்டப்படி, தண்ணீா் திறக்குமாறு தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று ஆந்திர அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு 1,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் 150 கி.மீ. தூரம் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தது. பின்னா், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு வந்தடைந்தது. இதனால் பூண்டியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏரியில் மகிழ்ச்சியுடன் வலைவீசி மீன்பிடிக்கத் தொடங்கினா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஏரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 109 மில்லியன் கன அடி நீா் இருப்பு பதிவாகியுள்ளது. காலையில் கிருஷ்ணா நதி நீா் பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது 100 கன அடி நீா் மட்டும் வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் படிப்படியாக உயர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com