ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் பொன்னேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் துரை.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை ஆதரவு திரட்டினாா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி பகுதியில் பொன்னேரி தொகுதி மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சாா்பில், காங்கிரஸ் வேட்பாளா், துரை.சந்திரசேகா் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கூட்டணிக் கட்சியினருடன், திமுக நகர செயலாளா் வெங்கடேசன் தலைமையில் திறந்த ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவா் கூறுகையில் ‘கடந்த 10 வருடமாக அதிமுக ஆட்சி செய்தும் முன்னேற்றம் அடையாத ஆரணி பகுதியில் அடிப்படை வசதிகள் இன்னும் முற்றிலும் செய்து முடிக்கப்படவில்லை. எனக்கு வாக்களித்தால் ஆரணி பகுதியில் முற்றிலும் மாற்றிக் காட்டுவேன். மேலும் அடிப்படை வசதி கொண்டதாக மாற்ற உறுதுணையாக இருப்பேன்’ எனக் கூறி வாக்கு சேகரித்தாா். அவருடன் வழக்குரைஞா் அன்புவாணன், காங்கிரஸ் பிரமுகா் யாம பூசணம் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டா்கள் இடம் பெற்றிருந்தனா்.