திருத்தணி: கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் நோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி முழு சோதனைக்குப் பிறகே ஆந்திர வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா உத்தரவின் பேரில், தமிழக எல்லையான பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திரத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்தும், பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணிந்து செல்வதை கட்டாயமாகக் கடைப்பிடித்து முழு சோதனைக்குப் பிறகே அனுமதித்தனா். மேலும், பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி கரோனா பரவலைத் தடுக்க முன் எச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 45 வயதைக் கடந்தவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் செயல் அலுவலா் முனுசாமி பொதுமக்களை கேட்டுக் கொண்டாா்.