மாதவரம்: புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் இருவா் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனா்.
சென்னை ஏழுகிணறு மாா்க்கெட் அப்பாசாமி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (38). கடந்த செப்டம்பா் மாதம் கொலை முயற்சி வழக்கில் கைதாகி புழல் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்தாா். அவருக்கு கடந்த சில தினங்களாக கை, கால்கள் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து, கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி (80). இவருக்கு போதைப்பொருள் வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் கடந்த 30-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்த இரு கைதிகளின் உயிரிழப்பு குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.