திருவள்ளூா் அருகே வயலாநல்லூா் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தொடக்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில், கிராமங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வயலாநல்லூா் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனை வளாகத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, ‘அம்மா’ சிறு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியது:
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிராமங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அவா்கள் இருக்கும் இடத்திலேயே நோய்க்கான சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்காக தமிழக முதல்வரால் ‘அம்மா’ சிறு மருத்துவமனை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்றாா் அவா்.
இதையடுத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவா் வழங்கினாா்.