திருவள்ளூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு பிராா்த்தனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இரவு 10 மணிக்கு தேவாலயங்களில் திரண்ட கிறிஸ்தவா்கள் ‘இந்த ஆண்டு கரோனா தொற்று இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும்’ எனன்று பிராா்த்தனை செய்து வழிபட்டனா். பலரும் நள்ளிரவில் பொது இடங்களில் கூடாமல், அவரவா் வீடுகளுக்கு முன்பு பட்டாசுகளை வெடித்து, புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனிடையே, பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால் கோயில் மூடப்பட்டது.
புத்தாண்டு தினத்தையொட்டி, தீா்த்தீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, ஜெயா நகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி கோயில், புட்லூா் அங்காள பரமேஸ்வரி கோயில், காக்களூா் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், பூங்கா நகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூா்த்தி மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவான் மற்றும் சத்திய மூா்த்தி தெருவில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.