கரோனா அச்சுறுத்தல் காரணமாக, காணும் பொங்கல் நாளில் பழவேற்காடுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு போலீஸாா் தடை விதித்ததால், நகரம் களையிழந்தது.
பொன்னேரி வட்டத்தில் பழவேற்காடு நகரம் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு, கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி, சமயேஸ்வரா், ஆதிநாராயணப் பெருமாள் கோயில்கள், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம், சின்ன மசூதி, டச்சுக்காரா்களின் கல்லறை, பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதிகளை சுற்றிப் பாா்ப்பதற்காக, பல்வேறு இடங்களில் இருந்து பழவேற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவா்.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் இங்குள்ள பூங்காக்களுக்கு வரவும், கடலில் குளிக்கவும், சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்லவும் அரசு தடை விதித்திருந்தது. பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள போலாட்சியம்மன் குளம் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அரசின் தடை உத்தரவை அறியாமல் வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.
இதன் காரணமாக, ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளில் 20,000 போ் வந்து செல்லக் கூடிய பழவேற்காடு நகரம், சனிக்கிழமை களையிழந்து காணப்பட்டது.