திருவள்ளூர் மாவட்டத்தில் 757 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு மாணவ,மாணவிகளின் நலனைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடையே கருத்துக்கேட்பு கூட்டமும் இம்மாத தொடக்கத்தில் ஒரு வாரம் நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சேர்ந்தோர் மாணவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு செல்லலாம் என அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 757 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலை 8 மணி முதல் மாணவர்கள் வருகை தந்தனர். அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பள்ளிகள் தொடங்கியது. அதற்கு முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்ட தெர்மல் மீட்டர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் வகுப்பறைகளுக்குள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கினர். 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் தொடங்கிய நிலையில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் பள்ளிகளை மேற்பார்வையிட்டனர். அப்போது, மாணவிகள் கரோனா விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் அமர வேண்டும், தனியாக குடிநீர்,உணவு எடுத்து வந்து அருந்த வேண்டும், அதேபோல் பாடவேளைகளையும் நன்கு கவனித்து படித்தல் குறித்து ஆலோசனைகளையும் வழங்கினர்.