திருவள்ளூா் அருகே பழவேற்காடு பகுதியில் தனியாா் துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு அப்பகுதியைச் சோ்ந்த மீனவ கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம், லைட்அவுஸ் குப்பம் ஊராட்சி தலைவா் ராஜேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியது:
பழவேற்காடு அருகே லைட் அவுஸ் குப்பம் ஊராட்சியில் 15 ஆயிரம் போ் வசிக்கின்றனா். பழவேற்காடு பகுதியில் 4 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 69 மீனவக் கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் கடலில் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனா்.
இப்பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 6,111 ஏக்கா் பரப்பளவில் தனியாா் துறைமுகம் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனா். இந்த தனியாா் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் எங்கள் பகுதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே, துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.