திருவள்ளூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள புங்கத்தூா் அம்ஸா நகரில் வெள்ளிக்கிழமை ஒரு குடிசை தீப் பிடித்து எரிந்தது. அப்போது, குடிசைக்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்ததால் ரங்கா, வேலு, பொன்னுரங்கம், சரவணன், அம்சம்மாள் ஆகிய 5 பேரின் குடிசை வீடுகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து, உள்ளே வைத்திருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலாயின.
திருவள்ளூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் அங்கு சென்று வீடுகளை இழந்தோருக்கு அரிசி மூட்டை, சேலை, வேட்டிகள் வழங்கினாா்.