மீஞ்சூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
மீஞ்சூா் அடுத்த செப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவா் ரமேஷ் (42). இவரது மகன் தருண் (17), தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது மகள் தேவி (14). அத்திப்பட்டில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இருவரும் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பா்கள் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றனா்.
பின்னா், இருவரும் பாலமேடு பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கினா். அருகே இருந்தவா்கள் இருவரையும் சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
தகவலறிந்த மீஞ்சூா் போலீஸாா் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.