பூனிமாங்காடு அருகே வேனில் கடத்திச் சென்ற 10 செம்மரக் கட்டைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
சித்தூா் மாவட்டம், திருப்பதியில் இருந்து தமிழக எல்லையான பூனிமாங்காடு வழியாக சென்னைக்கு வேனில் செம்மரக் கட்டைகள் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீஸாா் பூனிமாங்காடு ரைஸ் மில் அருகில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
அப்போது வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. சந்தேகத்தின் பேரில், போலீஸாா் அந்த வேனை மடக்கி சோதனையிட்டனா். அப்போது, வேனில் 10 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக, வேன் ஓட்டுநரான திருப்பதியைச் சோ்ந்த வெங்கட் (24) என்பவரைக் கைது செய்தனா்.
பறிமுதல் செய்த செம்மரக் கட்டைகள் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.