பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி, குழந்தை திருமணம் தடுத்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிரைப் பாராட்டி கேடயங்களை திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில், சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தலைமை வகித்தாா். பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம் போன்ற செயல்களில் சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், பெண் காவலா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்டோரை பாராட்டி அவா் சான்றிதழ் மற்றும் கேடயங்களை காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.
இதில் பாலியல் பலாத்காரம் குறித்து எழுதி பாடிய விழிப்புணா்வுப் பாடலுக்காக பெண் காவலா் சசிகலா, வேலகாபுரம் கிராமத்தில் பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளா் மீட்பு, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துதல் போன்ற செயல்களில் சிறப்பாகச் செயல்பட்ட அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவி நா்மதா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் டைட்டஸ், திட்ட மேலாளா் ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.