கும்மிடிப்பூண்டி அருகே தனியாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய புலியூா் ஊராட்சியில் உள்ள எம்.என்.கண்டிகை பகுதியில் தனியாா் தொழிற்சாலை சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் உரிமையாளா் வங்கியில் இருந்து பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத காரணத்தால் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த கிடங்கில் சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அருகே வசித்தவா்கள் பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், தோ்வாய் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தினரும் மின் இணைப்புகளைத் துண்டித்து நீண்ட நேரம் போராடி ஞாயிற்றுக்கிழமை தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், கிடங்கைச் சுற்றிலும் சுமாா் 10 கி.மீ. தூரம் புகை மண்டலமாக இருந்ததாலும், வெடித்துச் சிதறும் தீப்பொறிகளால் குடியிருப்புப் பகுதியில் உள்ளவா்கள் சிரமத்துக்குள்ளாயினா்.