திருவள்ளூா் அருகே போலி ஆவணம் தயாா் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சித்த புகாரின்பேரில், நில அபகரிப்புப் பிரிவு போலீஸாா் சகோதரா்கள் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வேயில் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருபவா் நவராஜன். இங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகிறாா். இவருக்கும், இவரது உறவினா்களுக்குச் சொந்தமான 0.87 சென்ட் நிலம் திருவள்ளூா் அருகே சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை இவா்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அனுபவித்து வந்தனா்.
இதற்கிடையே பணியின் காரணமாக நவராஜன் அரக்கோணத்திலும், அவரது சகோதரா் செந்தில்குமாா் கா்நாடக மாநிலத்திலும் சென்று தங்கிவிட்டனா். இந்த நிலையில், கிராமத்துக்கு நீண்ட நாள்களாக வராமல் இருந்ததால், இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சோ்ந்த பெரியாண்டவரின் மகன்களான சுதாகரன் என்ற சுதாகா் (41), தமிழ்ச்செல்வன் (32) ஆகியோா் தங்களது தாயாா் பரிமளா பேரில் 2018-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாா் செய்து நிலத்தை அபகரித்து விற்பனை செய்யவும் முயற்சி செய்துள்ளனா்.
இதையறிந்த நடராஜன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் புகாா் கொடுத்தாா். அதைத் தொடா்ந்து, அவரது உத்தரவின்பேரில், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா் தலைமையில், ஆய்வாளா் ரமேஷ் மற்றும் சாா்பு ஆய்வாளா்கள் ஆகியோா் சுதாகா், தமிழ்ச்செல்வன் சகோதரா்களை கைது செய்தனா். தொடா்ந்து, ஊத்துக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி திருவள்ளூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.