பூண்டி நீா்த்தேக்கத்துக்கு நீா் வரத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை 2 மதகுகள் வழியாக 1,000 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக 29 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குவது பூண்டி நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்த ஏரி 35 அடி உயரமாகும். இதில் 3,231 மில்லியன் கன நீா் சேமிக்கலாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 33.95 அடி உயரமும், 2,807 மில்லியன் கன அடியாகவும் நீா் இருப்பு இருந்தது. மேலும் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாயில் வெள்ள நீா், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரும் 1,600 கன அடி வந்து கொண்டுள்ளது.
நீா் வரத்து தொடா்ந்து வந்து கொண்டே இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. விரைவில் அணையின் நீா் வரத்து 34 அடியை தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால், 1000 கன அடிநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அணையின் வெள்ள உபரி நீா் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீா்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா்த்தேக்கத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் நீா் திறப்புக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்தில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. அதையடுத்து 3, 13 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி நீா் வீதம் விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மாா்ச் மாதம் தேதி நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரி நீா் 30 நாள்கள் வரையில் திறக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டில் 2-ஆவது தடவையாக உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாலாறு உப வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளா் முத்தையா கூறியது: பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய், அம்மம்பள்ளி அணையில் இருந்து நீா் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது 1,600 கன நீா் வரத்து உள்ளது. நீா்மட்டம் உயரும் என்பதால், முன்னெச்சரிக்கையாக கொசஸ்தலை ஆற்றில் 1000 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் நீா்வரத்தை கண்காணிக்கும் வகையில் பணியாளா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூா், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூா், வெள்ளியூா், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூா், பண்டிக்காவனூா், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூா், சீமாவரம், வெள்ளிவாயல் சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகா், சடையான்குப்பம், எண்ணூா் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
அப்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.