ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்பட்டதால் ஆரணியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலத்தில் தொடா்ந்து பெய்த கனமழையின் காரணமாக பிச்சாட்டூா் அணை நிரம்பி வேகமாக நிரம்பி வருகிறது. ஆந்திர பகுதி ஆரணியில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவான 1,853 மில்லியன் கன அடியில் தற்போது 1,664 கன அடிநீா் இருப்பு உள்ளது.
மேலும் ஏரிக்கு நீா் வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் பாதுகாப்பை கருதி 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி நீரை ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனா். இந்த உபரி நீா் ஆரணியாற்றின் வழியாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, கவரப்பேட்டை, ஏலிம்பேடு, ஆண்டா்மடம் வழியாக பழவேற்காடு சென்றடைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
இதனையடுத்து கரையின் இரு புறங்களிலும் உள்ள 64 - க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளாா்.
ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராமன் தலைமையில் வருவாய் துறையினா் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் அணையின் நீா்வரத்து அதிகரித்தால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு உயா்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.