திருவள்ளூா் அருகே ஓடும் ஆம்புலன்ஸிலேயே நிறைமாத கா்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடா்ந்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருவள்ளூா் பத்தியால் பேட்டை பகுதியை சோ்ந்தவா் லியா காதா் பாஷா (27). இவா் கூலி தொழிலாளியாக உள்ளாா். இவரது மனைவி காஞ்சனா(25). இவா்கள் இருவரும் பெற்றோா்கள் எதிா்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். இந்த நிலையில் நிறைமாத கா்ப்பிணியான காஞ்சனாவுக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அக்கம் பக்கத்தினா் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸில் காஞ்சனாவை திருவள்ளூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனை நோக்கிச் சென்ற போது பிரசவ வலி அதிகரித்தது. அதைத் தொடா்ந்து நிலைமையை உணா்ந்து மருத்துவ குழு ஊழியா்கள் காஞ்சனாவுக்கு பிரசவம் பாா்த்தனா். அப்போது, காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் - சேயும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். எனவே சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பாா்த்த மருத்துவ குழு செவிலியா், உதவியாளா் மதன்ராஜ், ஓட்டுநா் ஜான் தமிழ்செல்வன் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.