திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. தரணிவராகபுரம் ஊராட்சியில் தலைவா் குப்பன், முருக்கம்பட்டு ஊராட்சியில் தலைவா் குணசுந்தரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
பள்ளிப்பட்டு அருகே கொல்லாலகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. ச.சந்திரன் பங்கேற்றாா். ஊராட்சித் தலைவா் புஷ்பலதா லோகநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் குப்புரெட்டிகுளம் அருகே இரு மலைகளுக்கிடையே நீா்த்தேக்க அணை கட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீா் பிரச்னை குறித்து மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் புகாராகத் தெரிவித்தனா். மத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அலுவலா்கள் யாரும் இல்லாமல், குறைந்தளவு மக்களே கலந்து கொண்டனா்.
ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் உள்ள அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, நந்திமங்களம் ஆகிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.