ராமகிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்தணியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணா் கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6-ஆம் தேதி மகா சம்ப்ரோக்ஷண யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின.
இதற்காக கோயில் வளாகத்தில் 6 யாக குண்டங்கள் 250 கலசங்கள் அமைத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் வேதமந்திரத்துடன் நடைபெற்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீா் கலசங்கள் யாத்ரா தானமாக மேளதாளத்துடன் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கலசத்திற்கு புனித நீா் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 7 மணியளவில் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.