வரும் தலைமுறையை காக்க 2026-ல் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்: அன்புமணி 

வரும் தலைமுறையை காக்க 2026ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

வரும் தலைமுறையை காக்க 2026ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ந.அனந்தகிருஷ்ணன், மா.ரமேஷ், பா.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் து.சேகர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில்  மாநில இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது, தமிழகத்தின் முன்னேற்றம் தான் பாமகவின் இலக்காகும். 

அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் அதிகாரம் இருந்தால் பல முன்னேற்றங்களை செய்து தர முடியும். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாமகவிடம் தீர்வு, செயல் திட்டங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் தான் போட்டிருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் இருக்கக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். வேலையின்மை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பாட்டாளி மாடல் ஆகும். தமிழக மக்கள் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதனை நாம் வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும். இந்தியாவை வழிநடத்துகிற அளவுக்கு பாமகவிடம் செயல்திட்டங்கள் உள்ளன. பாமகவிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், தமிழகத்தில் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும். 

ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டி தான் திராவிட மாடலாகும். தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை. சென்னையை சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளிடம் பணம் உள்ளது. நம்மிடம் உழைப்பு உள்ளது. 2026ல் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பாமக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றார் அன்புமணி ராமதாஸ். கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்குரைஞர் கே.பாலு, நிர்வாகிகள் பாலயோகி, குரு ஏழுமலை, சசிகலா ஜெயராமன், செந்தில்குமார், கோபிநாத், பாண்டுரங்கன், பாண்டியன், மாரியப்பன், பாபுஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com