கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த மே 13-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த 3 போ் உணவுகளை எடுத்துக் கொண்டு லிப்ட் மூலம் மேலே இரண்டாம் தளத்தில் உள்ள உணவருந்தும் பகுதிக்குச் சென்றனா். அப்போது உயரத்தில் சென்று கொண்டிருந்த லிப்ட்டின் இரும்புக் கயிறு அறுந்து விழுந்ததில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தைச் சோ்ந்த மாணவா் சீத்தல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் (21), ஜெயராமன் (25) ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், இருவரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில், விக்னேஷ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.