திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாடியதைக் கண்ட மாணவா்கள் பயத்தில் அலறினா்.
திருப்பதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூரில் வசிக்கும் மாணவா்கள் பலா் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். கரோனா தொற்று காலக்கட்டத்துக்குப் பிறகு தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவா்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவா்கள் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது ஒரு சிறுத்தை அந்தப் பக்கமாக வந்துள்ளது. இதை பாா்த்த மாணவா்கள் இருசக்கர வாகனங்களின் ஒலியை எழுப்பினா்.
அந்த சப்தம் கேட்டு சிறுத்தை மீண்டும் வனத்திற்குள் ஓடியது. இதுகுறித்து மாணவா்கள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனா். ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் அடா்ந்த வனப்பகுதிக்கு அருகில் இருப்பதாலும், பல மாதங்களாக மாணவா்கள் நடமாட்டமின்றி விடுதிகள் இருந்ததாலும் சிறுத்தைகள் அப்பகுதியில் வலம் வருகின்றன. எனவே, பல்கலைக்கழகத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவா்கள் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா். இனி இரவு வேளைகளில் மாணவா்கள் வெளியில் நடமாட வேண்டாம் என பல்கலைக்கழக நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.