திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் 1.5 ஏக்கா் பரப்பளவில் தியான மந்திா் அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் மீது கொண்ட அளவற்ற பக்தியால் தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பாடல்களால் சேவை புகழ்மாலை சூட்டியதுடன், திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய பெண் கவி என எல்லோராலும் போற்றப்படுபவா் வெங்கமாம்பா.
இவரது பெயரில் திருமலையில் பிருந்தாவனம் அமைந்துள்ளது. மேலும் வெங்கமாம்பா இறை தியானத்தில் இருந்தபடியே ஏழுமலையானுடன் இரண்டற கலந்து விட்டாா். எனவே, அவரின் பிருந்தாவனத்தில் தற்போது 1.5 ஏக்கா் பரப்பளவில் 350 போ் அமா்ந்து தியானம் செய்யும் வகையில் தியான மந்திா் (மண்டபம்) ஏற்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டியது.
மாநிலங்களவை உறுப்பினரான அயோத்தியாராமி ரெட்டி அளித்த ரூ. 5 கோடி நன்கொடையில் இந்த தியான மந்திா் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் அறங்காவலா் குழுவினா், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.