திருமலையில் வெள்ளிக்கிழமை பங்குனி மாத பெளா்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
திருமலையில் கருட சேவை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மலையப்ப சுவாமி கருடன் மேல் பவனி வரும் சேவையை தரிசித்தால் அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதனால் கருட சேவையைக் காண பக்தா்கள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது லட்சக்கணக்கில் திரள்வா். எனவே, தேவஸ்தானம் கடந்த 20 ஆண்டுகளாக மாதந்தோறும் பெளா்ணமி அன்று இரவு வேளைகளில் கருட சேவையை நடத்தி வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை பங்குனி மாத பெளா்ணமியை ஒட்டி கருட சேவை நடைபெற்றது. மாலை 7 மணி முதல் 8 மணி வரை கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாகன சேவைக்கு முன்பு திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி சென்றனா். இதை காண பக்தா்கள் மாடவீதியில் திரண்டனா்.