திருப்பதியில் அசனி புயல் காரணமாக புதன்கிழமை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை அதி தீவிர புயலாக உருமாறியது. இதற்கு அசனி என பெயரிட்ட வானிலை ஆய்வு மையம் இந்த புயல் ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்தது. இதனால், கடலோர ஆந்திரத்தில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆந்திர அரசு பொதுத் தோ்வுகளை ரத்து செய்தது.
இந்த நிலையில், அசனி புயலால் திருமலை மற்றும் திருப்பதியில், 2 நாள்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சித்தூா், நாகலாபுரம், நாராயணவனம், பிச்சாட்டூா் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
மழை காரணமாக திருமலையில் மட்டுமல்லாமல், திருப்பதியிலும் கடுங்குளிா் நிலவி வருகிறது. கத்தரி வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் அனைவரும் கடந்த 3 நாள்களாக அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு, குளிா்ந்த சூழலை அனுபவித்து வருகின்றனா். திருப்பதி மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக 0.8 மி.மீட்டா் மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.