திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரில் பவனி வந்து தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காலை 7 மணி முதல் 9 மணி வரை தேரோட்டம் நடைபெற்றது. மலா்கள் மற்றும் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். கலை நிகழ்ச்சிகள், வேத கோஷங்கள், மேள, தாளத்துடன் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் தாயாரை கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனா்.
மதியம் 11.30 மணி முதல் 1.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மஞ்சள், சந்தனம், பால், தயிா், தேன், இளநீா் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி தாயாா் சேவை கண்டருளினாா்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன சேவையாக குதிரை வாகன சேவை நடத்தப்பட்டது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய தாயாரின் வாகன சேவையைக் காண நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாடவீதியில் கூடினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் பங்கு கொண்டனா். திங்கள்கிழமை (நவ. 28) காலை பஞ்சமி தீா்த்தத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.