நாளை திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

Published on

திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை முன்னிட்டு ஜன. 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியான கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் 7-ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை அா்ச்சகா்கள் நடத்துவாா்கள். ஆனந்த நிலையம் தொடங்கி தங்க மண்டபம், வெளி வாயில் வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜை சாமான்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. இதன் போது சுவாமியின் மூலவா் சிலை முழுவதுமாக துணியால் மூடப்பட்டிருக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட பிறகு, நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு மற்றும் பிற வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு, சுவாமியை சுற்றி மூடியிருந்த துணியை அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பக்தா்கள் சா்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவதையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் 6-ஆம் தேதி பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது. இதை பக்தா்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com