மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் அளிப்பு

வந்தவாசி, செங்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள்
Updated on
2 min read

வந்தவாசி, செங்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை க.வேளாங்கண்ணி தலைமை வகித்தார். வந்தவாசி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சு.ராமமூர்த்தி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை தா.சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்: வந்தவாசி வட்டார வள மையம் சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்துக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் எச்.ராகவன் தலைமை வகித்தார். வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சங்கர் ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர்கள் கே.ஜி.மீனா, வி.ஆறுமுகம், எஸ்.முருகன், ஆர்.அரிகிருஷ்ணன், என்.பிரபு மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் அரசுப் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
தெள்ளாறு வட்டார வள மையம் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தெள்ளாறில் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.வெங்கடேசன் தலைமை வகித்தார். தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் டி.முரளிசுந்தரம் ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். தெள்ளாறு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராஜகோபால், செந்தமிழ் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் தெள்ளாறின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
செங்கத்தில்...: செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற புதுப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வெள்ளச்சிசுந்தரம், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன், புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சம்பத், ஆசிரியர் பயிற்றுநர் ராமச்சந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போளூரில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், சனிக்கவாடி நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சேத்துப்பட்டு ஒன்றியக் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம் மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், வண்ண பென்சில்கள், எழுது பொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் விஜய்பாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com