திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை கடந்த 2012 பிப்ரவரி மாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.104 கோடியில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு புதிய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.
பின்னர், இந்தக் கட்டடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது. இதன்பிறகு பழைய அரசு மருத்துவமனை சரிவர செயல்படவில்லை. அவசரச் சிகிச்சைக்குக்கூட நோயாளிகள் அனைவரும் புதிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பழைய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை இயக்க வேண்டும். போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பழைய அரசு மருத்துவமனையில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் கட்டடங்கள், ஏற்கெனவே பல்வேறு பிரிவுகள் இயங்கி வந்த பகுதிகள், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, குடியிருப்பு மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.