செங்கம் அருகே வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை சிறுதானிய சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கம் வேளாண் துறை சார்பில், பக்கிரிபாளையம், காந்திநகர், பாண்டியன் நகர், அந்தனூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் (பொ) கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில், பேராசிரியர் பரசுராமன் கலந்துகொண்டு சாமை, தினை, வரகு, பனிவரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை நவீன முறையில் சாகுபடி செய்வது குறித்தும், இவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர்கள் சிவகாமி, ராஜேஷ் ஆகியோர் சிறுதானிய பயிர்கள் அறுவடை, பிந்திய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்துப் பேசினர்.
மேலும், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை, மண் வளம், சொட்டுநீர்ப் பாசன முறைகள் உள்ளிட்ட நவீன விவசாய முறைகள் குறித்து வேளாண் துறையினர் விளக்கினர்.
இதில், உதவி வேளாண் அலுவலர்கள் குமார், வெங்கடேசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் சிலர், அவர்கள் பயிர் சாகுபடி செய்யும் முறைகள்குறித்து விளக்கினர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.