பழையனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
திருவண்ணாமலையை அடுத்த பழையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.24 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழையனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, பழையனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.24 லட்சத்தில் கர்ப்பிணிகள் தங்குவதற்கான கூடுதல் கட்டடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு திருவண்ணாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலருமான பெருமாள் நகர் கே.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கிவைத்தார்.
விழாவில், திருவண்ணாமலை கூட்டுறவு நகர்ப்புற வங்கித் தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் சுனில்குமார், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் சிவக்குமார், வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கன், கரிப்பூர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.