திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலுவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்வி உதவித்தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற துறைகள், நல வாரியங்களில் எவ்வித கல்வி உதவித்தொகையும் பெறக்கூடாது.
கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற விரும்புவோர் www.scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் கல்வி உதவித்தொகை பெறுவோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பயிலும் பள்ளி, கல்லூரியில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.