திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் சுய படம் (செல்பி) எடுத்து அனுப்பி பரிசு பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டம் 2015-இல் பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளைப் பாதுகாத்து, குழந்தைப் பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ், அக்டோபர் 9 முதல் 14-ஆம் தேதி வரை "புதிய இந்தியாவின் மகள்கள் வாரம்" கொண்டாடப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் முகநூல் மூலமோ அல்லது 9003397712 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலமோ தங்களது பெண் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட சுய படத்தை (செல்பி) பெண் குழந்தை, தாய், தந்தை ஆகியோரின் பெயர் மற்றும் முகவரியுடன் அனுப்பலாம். சிறந்த புகைப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பரிசு வழங்குவார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.