கடன் சங்க முப்பெரும் விழா
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில், பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, ஆசிரியர் தின விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் த.செந்தில்குமரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சு.இளங்கோவன், இரா.திலகம், சு.ராஜேஸ்வரி, வெ.ஏழுமலை, கோ.அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சி.அ.முருகன் வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொ.மோகன், வெ.ஸ்ரீராமுலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். விழாவில், 253 சங்க உறுப்பினர்களுக்கு ஈவுத் தொகையாக ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, பதக்கம் அணிவிக்கப்பட்டது. இதில், வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.