போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் ஊராட்சியில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்து மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமை வகித்தார். இதில், தோட்டக் கலை பயிர்களான சிறுகீரை, வெண்டைக்காய், கத்தரி உள்ளிட்ட பயிற்களை மாடித் தோட்டம் அமைத்து விளைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான விதைகளை தூவி இந்தியன் வங்கி மேலாளர் வின்ஜய்பொன்மலர் பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்தார்.
மகளிர் திட்ட களப்பகுதி வழி நடத்துநர் முருகன், ஜானகி, பயிற்சியாளர் செல்வி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.