நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வரானால் அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வியாழக்கிழமை வந்திருந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் போலீஸாரின் கெடுபிடிகளை மீறி விழா நடத்திய இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸார் விடுவிக்க வேண்டும்.
ஆன்மிக அரசியல் குறித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை முதல் 108 நாள்கள் பிரசாரம் செய்ய உள்ளோம். ஆன்மிக அரசியலை முன்வைக்கும் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வராக வந்தால், அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். தாமிரவருணி புஷ்பகரணி விழாவுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி, விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேரை புனரமைக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் மாநிலச் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்டச் செயலர் ஜெ.அசோக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.பாலாஜி ஆகியோர்
உடனிருந்தனர்.