திருவண்ணாமலை அருகே உணவகத்தில் தகராறு செய்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தியதாக சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஆணாய்ப்பிறந்தான் கிராமத்தில் மதுக் கூடத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 12-ஆம் தேதி இரவு சென்ற 3 பேர் 9 பீர் வகை மதுப் புட்டிகளை வாங்கினராம். இதற்கான பணத்துக்குப் பதிலாக ஏடிஎம் அட்டையைக் கொடுத்தனராம்.
இதற்கு, ஏடிஎம் அட்டை வேண்டாம் என்றும், பணம் கொடுங்கள் என்றும் உணவக கணக்காளர் பட்சிராஜன் (59) கேட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து உணவகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களை சேதப்படுத்தியதாக திருவண்ணாமலை பாவாஜி நகர் சுகன்ராஜ் (22), செங்கம் சாலை ராதாகிருஷ்ணன் (21), போளூர் சாலை 8-ஆவது தெருவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அருண்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.