கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில், கர்ப்பிணிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு உள்பட 11 வகையான சீர்வரிசை பொருள்களை கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவர் மணிகண்டபிரபு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் கருணாமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு, பொதுகுழு உறுப்பினர் பெய்யாமொழி மற்றும் ஊட்டச்சத்து அலுவலர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், நகரச் செயலர் அன்பு, மாவட்டப் பிரதிநிதி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் பாரதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 120 பயனாளிகளுக்கு 11 வகையான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டு, அரசின் நலத் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
இதில், குழந்தை வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் ஆண்டாள், மேற்பார்வையாளர்கள் செல்வி, உமா, வனமயில், இளநிலை உதவியாளர் பச்சையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.