ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
குண்ணத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும், தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழாவும் நடைபெற்றன. இதில், மேற்கு ஆரணி ஒன்றியம், ஆரணி ஒன்றியம், ஆரணி நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 300 கர்ப்பிணிப் பெண்களுக்கும் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மக்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்தத் திட்டங்களை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, இளம் பெண்களுக்கு தொழில் பயிற்சி, பாலூட்டும் பெண்களுக்கு இணை உணவு வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,127 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஆரணி பகுதியில் மட்டும் 188 மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதால், அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதேபோல, சமூக நலத் துறை சார்பில் பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
வழாவில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, இணை இயக்குநர் பாண்டியன், செய்யாறு சுகாதார துணை இயக்குநர் கோவிந்தன், குழந்தைகள் வளர்ச்சி ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் க.தமிழரசி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, எ.அசோக்குமார், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ப.திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அனைவரும் தேசிய ஊட்டச்சத்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.