இந்து மதத்தை திமுக வெறுக்கவில்லை என்றும், இந்து தீவிரவாதத்தைத்தான் வெறுக்கிறது என்றும் எ.வ.வேலு எம்எல்ஏ கூறினார்.
போளூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பேசியதாவது: இந்து மதத்தை திமுக வெறுக்கவில்லை. இந்து தீவிரவாதத்தைத் தான் வெறுக்கிறது. இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று கூறிய பிரதமர் மோடி, ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என மாற்றிக்காட்டினார். இதனால், தங்களது பணத்தை ஏடிஎம் மையங்களில் இருந்து எடுப்பதற்காக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர்.
உணவுப் பழக்கம் தனி நபரின் விருப்பம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை, திமுக பிரமுகர்கள் ராஜ்குமார், தனசேகரன், சுப்பிரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.