வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 18) நடைபெறுகிறது. இதற்காக வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் 280 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு 280 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 280 விவிபாட் இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவற்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லாவண்யா, வந்தவாசி வட்டாட்சியர் அரிக்குமார், டி.எஸ்.பி. தங்கராமன் ஆகியோர் முன்னிலையில் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அவசரத் தேவைக்காக மேலும் 84 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 86 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 22 மண்டலத் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள
29 வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.